Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னையில் பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு இடையே ரூட் தல பிரச்சினையால் ஏற்பட்ட மோதல் தொடர்பாக கைதான 3 பேரில் மதன் என்ற மாணவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்த இடத்திலேயே அவர் இல்லை என்பதற்கான சிசிடிவி ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டதால் மதன் என்ற மாணவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
சென்னை அரும்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான ரூட்டு தல பிரச்னையில் கடந்த மாதம் 23-ம் தேதி சில மாணவர்கள் பேருந்தில் சென்ற சக மாணவர்களை பட்டா கத்தியால் துரத்தித் துரத்தி வெட்டினர். தாக்குதலில் உதயசங்கர் என்ற மாணவர் படுகாயமடைந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தத் தாக்குதலுக்கு காரணம் எனக் குற்றம்சாட்டி பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான மதன், ஆகாஷ், சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மாதவரம் பாலம் அருகே தப்பி செல்ல முயன்றபோது கீழே விழுந்து அவர்கள் கைகளை உடைத்துக் கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், ஜாமீன் கோரி 3 பேரும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, சம்பவம் நடந்த ஜூலை 23-ம் தேதி மதன் கல்லூரிக்கே செல்லவில்லை என்றும், வேறொரு விபத்தில் சிக்கி அவர் 2 மாதமாக விடுப்பில் வீட்டிலேயே இருந்ததாகவும் மதனின் தாயார் அம்மு கூறியுள்ளார். வீட்டில் இருந்தவரை கைது செய்து போலீசார் அவரது கையை உடைத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜூலை 23-ம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் அரும்பாக்கத்தில் தாக்குதல் நடந்த நிலையில், பிற்பகல் 1.15 மணிக்கு மதன் அவரது சொந்த ஊரான பெரியபாளையத்தில் இருந்ததாகக் கூறி, அதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வகுமார், மதனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். ஆகாஷ், சரவணன் ஆகிய இருவரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. எந்த அடிப்படையில் மதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுந்துள்ளதால் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.